எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழென்று சங்கே முழங்கு!
இளங்கலைத் தமிழ் இலக்கியம்
திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலத்தில் அமைந்துள்ள இலொயோலா கல்லூரியில் பயிலும் மாணவ மாணவியர்களுக்குப் பொதுத்தமிழ் பாடத்தைக் கற்பிக்கும் துறையாக 2009-2010-ஆம் கல்வியாண்டில் தமிழ்த்துறை தொடங்கப்பட்டது. கடந்த 2019-2020-ஆம் கல்வியாண்டில் தமிழ் இலக்கியத்தில் இளங்கலைப் பட்டப் படிப்பை (BA – TAMIL) கற்பிக்கும் துறையாக தமிழ்த்துறை வளர்ச்சி அடைந்தது. பேரா.அ.ஆரோக்கியதாஸ் அவர்கள் தமிழ்த்துறைத் தலைவராகவும் பேரா.அ.ஷீலா, பேரா.ஞா.சேகர், முனைவர் சி.இரகு, முனைவர் நா.முரளி, முனைவர் பா.ஸ்ரீதர், பேரா.ச.சுந்தரேசன், பேரா.செ.நாகேஸ்வரி, முனைவர் நா.பிரபு ஆகியோர் துறைப் பேராசிரியர்களாகவும் பணியாற்றி வருகின்றனர்.
இளங்கலைத் தமிழ் இலக்கியம் பயிலும் மாணவர்களை ஒழுக்கத்திலும் கல்வியிலும் மேம்பட்டவர்களாக உருவாக்குவதே எங்களின் நோக்கமாகும். அவர்களுக்கு அரசு சார்ந்த உதவித் தொகையினையும் கல்லூரி நிர்வாகம் சார்ந்த உதவித் தொகையினையும் வழங்க ஆவன செய்கின்றோம். மாணாக்கர்களின் இலக்கிய ஆர்வத்தையும் தனித் திறமைகளையும் ஊக்குவிக்கும் வகையில் வீரமாமுனிவர் தமிழ் இலக்கிய மன்றத்தின் மூலமாக ஆண்டுதோறும் பல்வேறு கருத்தரங்குகளையும் துறைகளுக்கு இடையிலான கவிதைப்போட்டி, கட்டுரைப் போட்டி, பேச்சுப்போட்டி போன்ற பல்வேறு போட்டிகளையும் நடத்தி ஊக்குவித்து வருகின்றோம். பல்கலைக்கழகங்கள் மற்றும் பிற கல்லூரிகளில் நடைபெறும் போட்டிகளில் மாணாக்கர்களைப் பங்குபெறச் செய்து அவர்களின் திறமைகளை வளர்த்து வருகின்றோம்.
வேலை வாய்ப்புகள்
இளங்கலைத் தமிழ் இலக்கியம் பயிலும் மாணாக்கர்களுக்கு பல்வேறு துறைகளில் வேலை வாய்ப்புகள் உள்ளன. குறிப்பாக மாவட்ட ஆட்சியர் பணி, டி.என்.பி.எஸ்.சி-யில் அனைத்து விதமான நிலைகளிலும் அரசுப் பணி, கல்லூரிப் பேராசிரியர் பணி, பள்ளிகளில் ஆசிரியர் பணி, வானொலி, தொலைக்காட்சி, திரைப்படத்துறை, பத்திரிக்கைத்துறை, சுவடியியல்துறை, கல்வெட்டுத்துறை, சுற்றுலாத்துறை, தொல்லியல்துறை, பதிப்புத்துறை போன்ற பல்வேறு துறைகள் சார்ந்த பணிகளைப் பெற்றுத் தருவது தமிழ் இலக்கியம் ஆகும். மேலும் இப்பாடத்தினைத் தேர்வு செய்து பயிலும் மாணாக்கர்களுக்கு அமெரிக்கா, மலேசியா, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா இலங்கை, கனடா போன்ற நாடுகளிலும் வேலைவாய்ப்புகள் அதிகம் உள்ளன.